பிலாஸ்பூர்:
2014-ஆம் ஆண்டு தேர்தலின் போது தன்னை கங்கையின் மகனாக கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த மோடி, தற்போது 2019-இல் ‘ரபேல் ஏஜெண்ட்’ என்ற பெயருடன் வெளியேறப் போகிறார் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து பரிதாபப்பட்டுள்ளார்.
இமாசலபிரதேச மாநிலம், பிலாஸ்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், சித்து உரையாற்றியுள்ளார். அப்போது இவ்வாறு கூறியிருக்கும் சித்து, ‘ரபேல் ஒப்பந்தத்தில் கமிஷன் வாங்கினீர்களா இல்லையா?’ என்ற கேள்விக்கு மோடியிடமிருந்து பதில் பெற விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த கேள்வி தொடர்பாக நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் விவாதம் நடத்த நான் தயாராக உள்ளேன்; மோடி தயாரா?; ‘நானும் ஊழல் செய்யமாட்டேன்,மற்றவர்களையும் ஊழலை செய்ய அனுமதிக்க மாட்டேன்’ என முழங்கினீர்களே. தற்போது இந்த வாக்கியத்தை வைத்து
விவாதம் நடத்துவோம் வருகிறீர்களா?” என்றும் சித்து சவால் விடுத்துள்ளார்.
ஒருவேளை தான் இந்த விவாதத்தில் தோற்றால் அரசியலை விட்டே விலக தயாராக உள்ளதாகவும் சித்து குறிப்பிட்டுள்ளார்.